சென்னை

ந்திய வானிலை ஆய்வு மையம் கேரளா மற்றும் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”நேற்று அரபிக் கடலில் நிலவும் ‘பிபோர்ஜாய்’ புயல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், கோவாவில் இருந்து மேற்கு மற்றும் தென்மேற்கே 850 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து தென்மேற்கே 900 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இது இந்தியக் கடலோரப் பகுதியில் இருந்து விலகிச் சென்றுவிட்ட நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், தென் தமிழகப் பகுதிகளிலும் மழை பரவியுள்ளது.  வெப்பச் சலனம் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 9) ஓரிரு இடங்களிலும், வரும் 10, 11, 12-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். மேலும் சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

அதேபோல, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.