பார்ல்: ஓட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் முடிந்துவிட்டது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. அதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது, தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால் டாஸ் போடும் முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு நேற்று மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைகள் முடிவில் இரு அணி வீரர்கள், நிர்வாகிகள் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந் நிலையில் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.