திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜம்முவிலும் வாரணாசியிலும் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது

நேற்று காலை திருமலை அன்னமையா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது.   தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமிஅயில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.   இந்த கூட்டம் முடிந்த பிறகு சுப்பா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது சுப்பா ரெட்டி, “வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி உற்சவ நாட்களான ஜன. 6, 7 தேதிகளில் பக்தர்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் வழங்கப்படும். இதற்காக முக்கியப் பிரமுகர்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் உபி மாநிலம் வாராணசியில் ஏழுமலையான் கோயில் கட்ட குழுவில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குக் கோவில் கட்ட அனுமதி கேட்டு, அந்த மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுத அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் மும்பையில் உள்ள பாந்தராவில் ரூ. 30 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் மற்றும் தகவல் மையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

தேவஸ்தானம் 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலில், ரூ. 3,116 கோடியில் திட்டங்களைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் எதிர்பார்ப்பு, ரிவைஸ்ட் பட்ஜெட்டாக ரூ. 3,243 கோடியை தயார் செய்திருந்தது. ஏழுமலையான் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1,231 கோடியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 1,285 கோடி கிடைத்துள்ளது. அத்துடன், பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ. 270 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்த போது ரூ. 330 கோடி வருவாய் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் டி.எஸ்.பி. தகுதி வாய்ந்த அதிகாரியுடன் சைபா் குற்றங்களைக் கண்டறிய சைபா் குற்றப்பிரிவு ஏற்படுத்துதல், ஆகம ஆலோசனை மண்டலின் உறுப்பினர் ரமண தீட்சிதருக்கு மீண்டும் கவுரவ தலைமை அர்ச்சகர் பதவி, தேவஸ்தானத்துக்கென தனி கணக்குப் பிரிவு, பக்தர்களின் மனதைப் புண்படுத்தும்படி செய்தி வெளியிட்ட ஒரு செய்தி நிறுவனத்தின் மீது, ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடர முடிவு, ரூ. 14 கோடி செலவில் திருமலையில் உள்ள வராக சுவாமி கோயில் கோபுரத்துக்குத் தங்க முலாம் பூச கருவூலத்தில் நிலுவையில் உள்ள தங்கக் கட்டிகளை எடுத்துக் கொள்ள முடிவு, திருப்பதி-திருமலைப் பாதையில் ரூ. 10 கோடியில் தனியார் நிறுவனம் மூலம் சுவர் அமைப்பது உள்ளிட்டவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மதன்மோகன் ரெட்டியைத் திருப்பதியில் உள்ள பா்ட் மருத்துவமனையின் இயக்குநராக நியமித்து உத்தரவு, திருப்பதியில் உள்ள பத்மாவதி, சீனிவாசா கல்யாண மண்டபங்களில் குளிர்சாதன வசதி ஏற்படுத்த ரூ. 3.20 கோடி ஒதுக்கீடு, திருப்பதி மலைப் பாதையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளச் சென்னையில் உள்ள ஜி.என்.டி.யூ நிறுவன நிபுணர்களுடன் கூடிய குழு ஏற்பாடு; திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 14.50 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.” எனத் தெரிவித்தார்.