திருச்சி

மிழக கடலோர மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.   இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் குறிப்பாகக் கோடைக் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.  இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக்குவதன் மூலம் குடிநீர் பஞ்சம் வெகுவாக குறையும் என கோரிக்கை உள்ளது.  இன்று திருச்சி மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு கலந்துக் கொண்டார்.

அப்போது நேரு செய்தியாளர்களிடம், “முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.  சென்ற 10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் 100 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 75 எம்எல்டி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

அத்துடன் ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்வோம். விரைவில் அந்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இத்திட்டத்தின் வாயிலாக 16 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள். இதன் மூலம் 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அத்துடன் ராமநாதபுரம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” எனத்  தெரிவித்துள்ளார்.