டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் கங்காராம் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,  அவரின்  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில்  நேற்று முன்தினம் (6ந்தேதி) அனுமதிக்கப்பட்டார்.  தொடக்கத்தில், அவர் வழக்கமாக நடைபெறும் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், அவருக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட்டதால், அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இன்று 3வது நாளாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க பிரபல மருத்துவமனையான கங்காரம் மருத்துவமனை இன்று சோனியாவின் உடல்நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பாதை தொற்றிலிருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக   தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியை, அவரது மகள் பிரியங்காகாந்தி உடன் இருந்து கவனித்து வரும் நிலையில், இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி , இடைவேளை நேரத்தில் மருத்துவமனை வந்து தனது தாயாரை சந்தித்தார்.