டில்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5 மாநில காங்கிரஸ் தலைவர்களைத் தேர்தல் தோல்வி காரணமாக ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப்,  மற்றும் கோவா ஆகிய மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன.  இந்த தேர்தல்களில் பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.  மற்ற 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதாகக் கூறப்பட்டது.  குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை அளித்ததால் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.   இந்த 5 மாநிலங்களிலும் கட்சியை மாற்றி அமைக்க உள்ளதால் அவர் இந்த ராஜினாமாவைக் கோரி உள்ளார்.