மும்பை: பெற்றோரை பாதுக்காக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை என  மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே பல நீதிமன்றங்கள் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், தற்போது மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மும்பையில், மனச்சோர்வால் கணவன் படுக்கையில் உள்ள நிலையில், அவரை சட்டப்படியான காப்பாளராக அறிவிக்கக் கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், தாங்கங் மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு 2 வீடுகள் சொந்தமாக இருந்தும், தங்கள் மகன் தந்தையைக் கவனிக்கவில்லை என்றும், தானே மருத்துவச் செலவைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,  இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளக் கோரி அவர்களின் மகன் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது, மகனிடம், உங்கள் தந்தையை ஒருமுறையாவது மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? அவரது மருத்துவச் செலவை ஏற்றீர்களா? என மகனிடம் நீதிபதிகள் நேரடியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவரது மகன், தந்தையின் மருத்துவ செலவை தாயே செய்து வருவதாகவும், அதனால் தான் கவனிக்கவில்லை என்று கூறினார். அதுபோல மனுதாரர் தரப்பிலும், மகன் ஒருமுறைகூட தந்தையை கவனிக்கவில்லை என்றும், அவரது மருத்துவ  செலவை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதற்கான ஆவனங்களும் தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஆய்வு நீதிபதிகள், ஆவனங்களின்படி, மகன், தந்தையை பேணவில்லை என்பது ஊர்ஜிதமாகி உள்ளது என்று தெரிவித்ததுடன்,  தந்தையைப் பேணுவதில் அக்கறை இல்லாத மகனுக்கு, அவர் உயிருடன் இருக்கும் வரை  அவரது சொத்துக்களில் எந்த உரிமை  இல்லை எனக் கூறி இடையீட்டு மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்டனர்.