டில்லி
உலகப் புகழ்பெற்ற சில சமூக வலைதளங்கள் கடந்த 2013ஆம் வருடம் வாக்காளர் விவரங்களை கேட்டதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் சைதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முகநூல் மூலம் அமெரிக்காவில் வாக்காளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகாரை ஒட்டி இந்தியாவிலும் அதே போல நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் இந்தியாவிலும் தேர்தல் நேரத்தில் தங்கள் நிறுவனம் சில கட்சிகளுக்கு பணி புரிந்ததாக தெரிவித்தது. மேலும் எந்தக் கட்சிக்காக பணி புரிந்தோம் என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்காத போதிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று குறை கூறி வந்தன.
இந்நிலையில் முகநூலுடன் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாத நிலையிலும், அந்த தளம் சில கேள்விகளை உபயோகிப்பாளர்களிடம் கேட்டது. “உங்களுக்கு பதினெட்டு வயதாகி விட்டதா? நீங்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்து விட்டீர்களா?” போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டது. இந்த வருடம் வாக்காளர் தினமான ஜனவரி 25 அன்று அனைவரும் வாக்களிப்போம் என உறுதி மொழி எடுக்கச் சொல்லி இருந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர் நசிம் சைதி. அவர், ”கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு சில சமூக வலை தளங்கள் வாக்காளர் விவரங்களைக் கேட்டது. குடியரசுக் கொள்கையை மேம்படுத்த இவ்வாறு கேட்டதாக தெரிவித்தது. ஆனால் ஆணையம் கண்டிப்பாக அனுமதி வழங்க முடியாது என சொல்லி விட்டது. அத்துடன் வாசகர்களின் சொந்த தகவல்களான, தொலைபேசி எண், ஈ மெயில் முகவரி, புகைப்படங்கள் போன்றவைகளும் ஆணய தளத்தில் இருந்து எடுக்க அனுமதி வழங்குவதில்லை எனக் கூறி விட்டோம்” என தெரிவித்துள்ளார்.