சிம்லா

சிம்லாவில் உள்ள ஒரு ஜெயின் கோவிலுக்குள் குட்டை ஆடைகள் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபை சார்பில் செயல்படும், சமூகம் சார்ந்த பிரபல கோவில் ஒன்று இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் உள்ளது. சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த கோவிலின் வெளியே சமீபத்தில் அறிக்கை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் புதிய ஆடை விதிமுறைகள் பற்றித் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் கண்ணியம் வாய்ந்த உடைகளைக் கோவிலுக்கு அணிந்து வர வேண்டும்.

குட்டையான ஆடைகள், அரைக் கால் சட்டைகள், பெர்முடா, மினி ஸ்கர்ட், இரவு ஆடைகள், கிழிந்த ஜீன்ஸ், பிராக் போன்ற ஆடைகளை அணிந்து வருபவர்கள் கோவில் வளாகங்களுக்கு வெளியே மட்டுமே இறைவணக்கம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவில் பூசாரிகளில் ஒருவரான பண்டிட் சஞ்சய் குமார் ஜெயின், ”நமது கண்ணியம் காக்கவும், நல்ல நடைமுறைகளைப் பின்பற்றவும் மற்றும் இந்து கலாச்சார மதிப்புகளைப் பராமரிக்கவும் வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து உள்ளார்.

அண்மையில், ஆடவர் துணையின்றி பெண்கள் வருவதற்கு டில்லி ஜமா மசூதி பாதுகாப்பாளர்கள் அனுமதி மறுத்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.  ஆனால் போராட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுந்த கண்டனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, அந்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.