மே 9-ஆம் தேதி இரவு 11.09 மணிக்கு பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தாயார் மணிமேகலை மறைந்தார். சிறிய உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரை துறையினர் பலர் கங்கை அமரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு குடும்பத்தினருக்கு உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை…

எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும், இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.

அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்… வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கண்ணீருடன் சிலம்பரன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.