ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல் 12.8.20

தடைகளைத் தகர்ப்பான் தணிகை வேலன் !!!

தடைகள், தோஷங்கள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. ஏன்? முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.

‘ஆறுமுக உருவாய்த் தோன்றி
அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப்போதில்
வீற்றிருந்து அருளினானே’

என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு. வாரம் என்பது வாரத்தின் நாட்களைக் குறிக்கும். இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கார்த்திகை’ அல்லது ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளைச் சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூரபத்மனை அழித்து தேவர்களையும், மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்களைப் போற்றும் வகையிலேயே கிருத்திகை விரத திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.

காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாகக் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும், சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர். கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகளைப் பக்தி சிரத்தையுடன் பாடி விரதத்தை முடிக்கின்றனர்.

அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாகத் திருத்தணிகை மலையைக் கந்த புராணம் போற்றிப் புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும், ‘திருத்தணிகை’ என்ற பெயரைச் சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. முருகப் பெருமான் இத்தலத்தில் ஞானசத்தியாகிய வேலை தாங்கி நிற்கிறார். முருகனின் 16 வகையான திருக்கோலங்களில் இங்கு ‘ஞான சக்திதரர்’ என்னும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் – அங்கே தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்! கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி – அதைக் காண்பவர்க்கு எந்தநாளும் இல்லையே வீழ்ச்சி! விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் – அது வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும். குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் – திருக்குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!

ஆடிக் கிருத்திகை நாளன்று முருகப் பெருமானைப் பக்தியுடன் மனமுருகப் பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானின் திருவருள் பெறுவோம்.