தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது.

இதில் மத்திய அரசு விதிகளுக்கு முரணாக டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தவிர, ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளதும், நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டியில்லாமல் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைத்து அவர்களுக்கு உள்ளேயே டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-21 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 14.76% சதவீதமும், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.84% சதவீதமும் குறைந்துள்ளது.

2016-21 ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை தவிர போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவில்லை.

மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்டில் 2016-21 காலகட்டத்தில் பள்ளிக்கல்விக்கு போதிய முன்னுரிமை வழங்கவில்லை. இதனால் 2016-17ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.94% சதவீதத்தில் இருந்து 2020-21ல் 0.85% சதவீதமாக குறைந்துள்ளது.

மேற்கூறிய நிர்வாகத் திறன் குறைவால் தமிழ்நாட்டில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது என்றும் தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையிலும் அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளியை குறைக்க முடியாது என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலவச மடிக்கணினி, காலணி மற்றும் பள்ளி பை வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவை முறையாக சென்றடையவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால், வீண் செலவு மற்றும் அரசு நிதி தேவையில்லாமல் முடக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள சில திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ. 2400 கோடி செலவிடப்பட்டும் அனைத்து மட்டங்களிலும் திறமையற்ற நிர்வாகத்தால் அவை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

2016 – 2021 வரையிலான ஆட்சி செயல்திறனற்ற ஆட்சி என்று சிஏஜி அறிக்கை விமர்சித்திருப்பதை அடுத்து எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவிவகித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.