12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மண்டல சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்களை விட மிகமிக கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சி.பி.எஸ்.இ தேர்வு ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் சென்னை மண்டல மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்துள்ள சி.பி.எஸ்.இ தேர்வு ஆணையர், இந்த பிரச்சனையை தீர்க்க பாட நிபுணர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்க கூடிய உள்கட்டமைப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

மாணவர்களின் கேள்வித்தாள் மற்றும் மதிப்பெண் விவகாரத்தில் எந்தவொரு தெளிவான முடிவையும் நேரடியாக தெரிவிக்காத ஆணையரின் இந்த பதிலை அடுத்து மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வலியுறுத்தி சு. வெங்கடேசன் எம்.பி., மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

தவிர, “பல பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒற்றைத் தேர்வு என்று “நீட்”டைத் திணிக்கும் ஒன்றிய அரசே,

ஒரே பாடத் திட்டத்திற்கு பல கேள்வித்தாள் என்பது நகை முரண், கொள்கை குழப்படி

பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முழுமையான நீதி வழங்கு” என்று தனது ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.