அமலாக்கத்துறை மூலம் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.

சீனா, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லாத பாஜக அரசு சிவசேனா மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிவசேனா கட்சியை அழிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக அதற்காகவே கட்சியில் பிளவு ஏற்படுத்திய ஏக்நாத் ஷிண்டே-வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்கிறது.

ஏக்நாத் ஷிண்டேவை தான் முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்று பாஜக விரும்பி இருந்தால் அதை எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதே செய்திருக்கலாம், ஆனால் அவர்கள் நோக்கம் சிவசேனாவை அழிப்பதில் உள்ளது என்பது இப்போது அனைவரும் தெரிந்துகொண்டனர்.

ஷிண்டேவுடன் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது என்னுடன் தொடர்பில் உள்ளனர். கட்சியில் பிளவு ஏற்படுத்தியதற்காக அவர்கள் வருந்துகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தி மற்றும் ஆதித்ய தாக்கரே இருவரும் மக்கள் தலைவர்களாக உருவாகியுள்ளனர். ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

பிரிவினையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் இருவரும் இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் கைகோர்த்துள்ளனர் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.