இஸ்லாமாபாத்

மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் பதவி ஏற்பார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 8 ஆம் தேதி பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. 3 நாட்களுக்குப் பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகி ஊழல் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 93 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் சர்தாரி பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வென்றன. மற்ற இடங்களைச் சிறிய கட்சிகள் கைப்பற்றின. பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை நிறுவ அரசியல் கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.

இம்ரான்கான் கட்சி கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதில் இருதரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவிதால் இரு கட்சிகளும் பல்வேறு சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தின.

அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. வரும் 29 ஆம் தேதி நாடாளுமன்றம் தனது முதல் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்கிற சூழலில் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தின. நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு கூட்டணி அரசை அமைப்பதற்கான உடன்பாட்டை இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்பார் என்றும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி  அதிபர் பதவிக்கான தேர்தலில் இரு கட்சிகளின் கூட்டு வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.