டில்லி

ரும் 2022 ல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக புதிய அணி அமைக்க சரத் பவார் முயன்று வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவையில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில தேர்தல் முடிவுகள் பலராலும் கவனிக்கப்பட்டன.    இவ்விரு மாநிலங்களிலும் பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்த திமுக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.   இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு தாம் அரசியல் வியூக பணியில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.

அண்மையில் மும்பையில் பிரசாந்த் கிஷோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார்.  அப்போது மிஷன் 2024 என்னும் அடுத்த மக்களவை தேர்தல் குறித்துத் திட்டமிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.  அப்போது பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பது குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

நேற்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மீண்டும் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசி உள்ளார்.  அதை தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடன் சரத் பவார் ஆலோசனை நடத்தி உள்ளார்.  அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்தார்,.

இன்று சரத் பவார் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.  இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி, திருணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். வரும் 2022 ஆம் ஆண்டு உபி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாக்கம் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.