சென்னை

மாநிலத் தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தருக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்

இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.  ஏற்கனவே, தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர்.பிரிய குமார், ஓய்வு பெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலை முத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த சில தினங்கள் முன் நியமிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இதற்கான உத்தரவை வெளியிட்டார்.

,தலைமை தகவல் ஆணையர் ஷகில் அக்தர், ஆணையர் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  நேற்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை தகவல் ஆணையர் ஷகில் அக்தர், ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அரசு சார்பில் இந்நிகழ்வில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநரின் செயலர் ஆனந்த் ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.