சென்னை: ஒரே பணி ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில்இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்  இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக, இதுவரை   75க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறிய திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், உடனே நிறைவேற்ற வலியுறுத்தி,   கடந்த 27-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கல்வித்துறை அலுவலக வளாகமான டிபிஐ வளாகத்தில்  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களின் போராட்டம்  இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

இதற்கிடையில்  போராட்டக்குழுவினருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேற்று (29ந்தேதி)  பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே போராட்டம் தொடர்கிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெண் ஆசிரியர்கள் பலர் உணவு எடுத்துக்கொள்ளாததால்,  உடல்நலம் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து வருகின்றனர். நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில்,  இன்று காலை மேலும்  10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.  இது ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று போராட்டக்குழுவினர்,.கல்வித்துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு  இருப்பதாக கூறி வருகின்றனர்.  இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காத பட்சத்தில் எங்களது பேராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் அறிவித்து உள்ளார்.