சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் வகுப்பின்போது, அரைகுறை உடையுடன் பாடம் எடுத்தது மட்டுமின்றி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல  பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவர்  பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்தது. புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்ணும் அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னையில் மட்டும் 22 மாணவிகள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 100 மாணவிகள் காவல்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், பாலியல் புகார்கள் தொடர்பாக, பத்மா சேஷாத்திரி, மகரஷி வித்தியா மந்திர், ஜார்ஜ் ஆங்கில இந்தியன் பள்ளி  மற்றும் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளிகளுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது,  சென்னை அடையாறில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கேளம்பாக்கம் மற்றும் நாமக்கலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதில், கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுசில் இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மீது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். 3 பள்ளிகளின் நிர்வாகிகளும் நேரில் ஆஜராகி புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.