சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னை கே.கே. நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபாலன்,  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் கடநத் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது சென்னை காவல்ஆணையர் சங்கர் ஜிவால் குண்டர் சட்டத்தை பாய்ச்சினார்.

இதை எதிர்த்து ஆசிரியர் ராஜகோபாலனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் எனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடை பெறவில்லை. தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவிவழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் எனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்’,  இது சட்ட விரோதமானது, அரசின் பழிவாங்கும் நடவடிக்கைஎ  என்று கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள், சம்பவம் நடைபெற்றபோது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக காவல்துறையினர் மீது கடுமையான சாடியதுடன், ஆசிரியர் ராஜகோபாலனை  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் மனுதாரர்களுக்கு வழங்காதது குறித்து கேள்வி எழுப்பியதுடன்,  ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ஏற்கனவே யுடியூபில் தமிழகஅரசு மீது பதிவிட்ட மாரிதாஸ் உள்பட பலர்மீது போடப்பட்ட வழக்குகள், குண்டர் சட்டங்கள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலை யில், தற்போது ஆசிரியர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சென்னை காவல்துறைக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.