சென்னை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி,  பல ஆண்டுகளாக ஒன்றாக  குடும்பம் நடத்தியதாக, துணைநடிகை அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறைசென்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி கடந்த ஜூன் மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். புகார் மனுவில், மணிகண்டன் தன்னை மணந்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னை கட்டாயப்படுத்திக்  கருக்கலைப்பு செய்ததாகவும்  தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது கொலைமிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் பெங்களூருவில் தங்கியிருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டையில் உள்ள பதினோராவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீஸ் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.