சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது பெண் போலீசார் இருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமாருக்கும் பெண் போலீசுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும் வீடு கட்ட பணம் தராததால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதாக இணை ஆணையரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமாரின் மனைவி அனுராதா அளித்திருக்கும் பேட்டியில், “எனது கணவருக்கு பாலியல் புகார் அளித்த பெண் காவலருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது.

இது தெரிந்ததும் பலமுறை இருவரையும் கண்டித்துள்ளேன். அந்த பெண்ணிடம் போனில் கெஞ்சியுள்ளேன். எனக்கும் ஒரு குடும்பம் உள்ளது. உனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனவே இது போன்று செய்யாதீர்கள் என்று கூறியுள்ளேன்.

கடந்த ஓராண்டாகவே எனது கணவருக்கும் பெண் போலீசுக்கும் இடையே பழக்கம் இருந்து வரும் நிலையில், நாளடைவில் அது சரியாகிவிடும் என்றே நினைத்திருந்தேன்.

பெண் காவலர் எனது கணவரிடம் ஐ.பி.எல். டிக்கெட்டை இலவசமாக கேட்டு வாங்கிச் சென்று கிரிக்கெட் பார்த்துள்ளார். நகை-பணத்தை பறித்துள்ளார். பெண் காவலருக்கு ஜிமிக்கி உள்ளிட்ட பல நகைகளையெல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.

எனது கணவரிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவரும் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார். இதுபோன்ற பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்துள்ளன. ரூ.5 ஆயிரம் 10 ஆயிரம் என அடிக்கடி கேட்டு வாங்கியுள்ளார்.

தற்போது மறைமலைநகரில் பெண் காவலர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு எனது கணவர் பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளார்.

மறைமலைநகரில் கட்டி வரும் வீட்டுக்கு பெண் காவலர் ரூ.25 லட்சம் கேட்டதும் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய எனது கணவர் உள் அலங்கார பணிகளுக்காக ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இருப்பினும் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளார். அந்த பணத்தை கொடுக்காத காரணத்தாலேயே அவர் புகார் அளித்துள்ளார்.

எனது கணவரை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த பெண் இப்படி செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் எனது கணவருடன் சொகுசு விடுதிக்கும் சென்று தங்கியுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். நல்லபடியாக பேசக்கூடிய விஷயங்கள் என்றால் அலுவலகத்தில் வைத்தே பேசிக் கொள்ளலாமே. இப்படி பலமுறை வெளியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

கடந்த 7-ந் தேதி கூட எனது கணவருடன் வெளியில் சென்ற பெண் காவலர் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். (இதற்கான வீடியோ ஆதாரத்தை அனுராதா வெளியிட்டார்.) இருவரும் விரும்பியே இப்படி வெளியில் சென்று வந்தார்கள்? என்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவே இதையெல்லாம் தெரிவித்துள்ளோம்.

இதுபோன்ற சூழலில் எங்கள் குடும்பத்தை பிரிக்கும் எண்ணத்தில் புகார் அளித்திருப்பது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்? என ஐ.பி.எஸ். அதிகாரி மீது புகார் அளித்துள்ள பெண் அவர் அறை எடுத்து வெளியில் தங்குவதற்கு என்னை அழைத்தார் என கூறி புகார் அளிக்காதது ஏன்? தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எனது கணவர் மீது காழ்ப்புணர்ச்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

என்ன நடந்தது? என்பது பற்றி எங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் அளிக்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக பழகிய பின்னர் எப்படி பாலியல் துன்புறுத்தல் என புகார் அளிக்க முடியும்?

பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த பெண் இப்படி செய்துள்ளார்.

இதன் மூலம் காவல் துறையில் 25 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த எனது கணவரின் பெயர் சிதைந்து போயுள்ளது. அவரது காக்கி சட்டையை கழற்ற நினைப்பது உயிரை பிச்சி எடுப்பது போல உள்ளது.

காக்கிச் சட்டையில்தான் எங்களது காதலே மலர்ந்தது. எனது திருமண நாளான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு எழுப்பி அவரது சஸ்பெண்டு உத்தரவு வழங்கியதை என் வாழ்வில் இடி விழுந்தது போன்று உணர்கிறேன். இது போன்று ஒரு பழிவாங்கும் செயலை அந்த பெண் செய்திருப்பது எனக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

எனவே பெண் காவலர் அளித்துள்ள புகாரில் அவசரப்பட்டு எனது கணவரின் பெயரை கெடுக்கக் கூடாது என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

எனது கணவர் வேலை செய்த இடங்களில் எல்லாம் நற்பெயர் எடுத்துள்ளார், முகம் தெரியாதவர்களுக்கு கூட, உதவிகளை செய்துள்ளார். பெண் காவலரின் செயலால் எனது கணவர் பாதிக்கப்பட்டு குடும்பமே சிதைந்து போய் நிற்கிறது.

இந்த பேட்டியின் போது அதிகாரி மனைவி வெளியிட்ட வீடியோவில் ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ் குமாரும், பெண் காவலரும் விடுதியில் தங்குவதற்காக ஒன்றாக செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதன் மூலம் சென்னை காவல் துறையில் ஐ.பி.எஸ். அதிகாரி-பெண் போலீஸ் இடையே இருந்து வந்த காதல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.