சென்னை:  செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில்,  “ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி”  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “செப்டம்பர் 5 ஆம் நாள் இந்திய திருநாட்டை கல்வி உலகமும், ஆசிரியர் உலகம் போற்றும் நன்னாள். தமிழ்நாட்டு ஆசானாக பணியாற்றி பார்போற்றும் இந்திய குடியரசுத் தலைவராக பவனி வந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பெருமையோடு இணைத்து, ஆசிரியர் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள். இந்த இனிய நாளில் தமிழ்நாடு ஆசிரியர்கள் யாவருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

“வெள்ளத்தால் அழியாது

வெந்தழலால் வேகாது

கள்வராலும் கொள்ளத்தான் முடியாது,

கொடுத்தாலும் நிறைவொன்றிக் குறைவுறாது”

என போற்றப்படும் கல்வி. அதனை பயிற்றுவிக்கும் பணியினை ஈடுபாட்டோடு செய்து வரும் ஆசிரியர்கள் சமுதாயம் எனும் கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்.ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியை புகட்டுவது மட்டுமன்று அது மனிதர்களை அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி ,புனிதப் பணி.கை தேர்ந்த சிற்பிகளால் தான் கல்லையும், சிலையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையை கல்வி அறிவு என்னும் கத்தியால் செம்மைப்படுத்தி, அறிவுள்ள செய்திகளை புகுத்தி, அவர்களை உயர்ந்த மாணவர்களாய் உருவாக்குகிறார். உழவர் மேடு பள்ளங்களை சமன் செய்து, நீர் பாய்ச்சி ,உழுது ,உரமிட்டு பயிர் செய்து, அறுவடை செய்கிறார். ஆசிரியர் ஏற்றத்தாழ்வும் ,அறிவின்மையும், ,வறுமையும் உடைய மாணவர்களின் மனதை பயன்படுத்தி அவர்களிடமிருந்து அறிவை அறுவடை செய்கிறார்.

மாணவர்கள் இடைநிற்றலை மிகவும் தரமான கல்வியை பெறுவதற்கும் ,தமிழ்நாடு அரசு பல்வேறு நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது .சமூகத்தை வளப்படுத்த வல்ல ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ப தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, மாறி வரும் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, வளர்ந்துவரும் உலகின் அத்தனை பரிமாணங்களையும் மாணவர்களை அறிக்கை செய்து ,நேர்மை ,ஒழுக்கம், உண்மை என்று அறநெறி பிறழாத வாழ்க்கையை ,தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள மாணவர்களை உருவாக்கி தன் முனைப்போடு செயல்பட வேண்டுமாய் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.