சென்னை,

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரியது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு (4ந்தேதி) ஒத்திவைத்ததுள்ளது சென்னை ஐகோர்ட்டு

தமிழகத்தில்  உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தொடங்கியது.

ஆனால், இடஒதுக்கீடுகுறித்த அறிவிப்பு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க. தொடர்ந்த வழக்கையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, உள்ளாட்சிகளை நிர்வகிக்க அரசு  சார்பில்  தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில், அவர்களின் பதவி வரும் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குடன்  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்துவந்தது.

இந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான உத்தேச அட்டவணையை கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. அதைத் தொடர்ந்து விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, வரும் திங்கள்கிழமை வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  அறிவித்துள்ளது.