சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் நீதிமன்ற விசாரணக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது செந்தில்பாலாஜி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவைச் சேரந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கின் டிசம்பர் 17ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அவரின் சகோதரர் அசோக் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்போது உச்சநீதிமன்றம் தனக்கு ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தி இருப்பதாகச் செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதைப் படித்து பார்த்த நீதிபதி, ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், அந்த தளர்வு இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு அது பொருந்தாது என்று கூறினார். அதனால், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கில் முதல் 5 பேரிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மீதமுள்ளவர்களிடம் சாட்சி விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 9 ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
[youtube-feed feed=1]