சென்னை

ரும் வெள்ளிக்கிழமைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.  எனவே வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு 2-வது நாளாக விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அவர்,

“சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்கச் சட்டத்தில் அனுமதி வழங்காவிடினும் புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தைக் கண்டுபிடிக்க, சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பக்கட்ட முகாந்திரம் தான். ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரைக் காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது

எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாகக் கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை” 

என வாதங்களை முன்வைத்தார்.

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு  ஒத்தி வைத்து 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.  அமலாக்கத்துறையின் வாதங்கள்  பல மணி நேரமாக நீடித்து நிறைவடைந்ததையடுத்து, மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.