சென்னை: கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம், ஆண்களுக்கு திருமண உதவித் தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவர்களின் பொழுதை பயனுள்ளதாக்கும் வகையில், ரூ.2.59 கோடி மதிப்பில் 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடி செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்,

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உயர் கல்வி பயின்றாலும் சலுகைகள் வழங்க வாய்ப்பு அளிக்கும் வகையில் முதல் தலைமுறை பட்டதாரி என கல்வி உதவித் தொகை திட்டம் மாற்றம் செய்யப்படும்.

இயக்கங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு IFHRMS திட்டத்திற்காக ரூ.85.20 லட்சம் செலவில் கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்,

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்

கள்ளர் சீரமைப்பு பள்ளி கட்டடங்களில் ரூ.6 கோடி செலவில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், 15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் உ

இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ரூ. 5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும்.

நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கான திருமண உதவித் தொகை உயர்த்தப்படுகிறது.  ஆண்களுக்கான உதவித் தொகை ரூ.3 ஆயிரமாகவும், பெண்களுக்கான உதவித் தொகை ரூ. 5 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து கள்ளர் தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும்

கல்வி உதவித் தொகை திட்டத்தில் முதல் பட்டதாரி என்பதற்கு பதில் முதல்முறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.