விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு ஊழன் வழக்கின் விசாரணைக்கு பொன்முடி நேரில் ஆஜர் ஆனார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை  29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சியின் போது, பொன்முடி அமைச்சராக இருந்தார். அப்போது அவர் விதியை மீறி, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக புகார் கூறப்பட்டது. புகாரில், அரசால் அனுமதிக்கப்பட்ட 3 அடி ஆழத்திற்கு செம்மண்ணை வெட்டி எடுப்பதற்கு பதிலாக 150 அடி முதல் 200 அடி வரையிலான ஆழத்திற்கு செம்மண்ணை வெட்டி எடுத்தனர். இதன்மூலம் அரசால் அனுமதி வழங்கப்பட்ட அளவைக் காட்டிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண்ணை வெட்டி எடுத்து முறைகேடாக விற்பனை செய்து அரசிற்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 2012ஆம் ஆண்டு வானூர் தாசில்தாராக பணியில் இருந்த குமரபாலன் என்பவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த வழக்கில், கடந்த 2012ல் அமைசர் பொன்முடி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பொன்முடி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 2-வது சாட்சியாக, அப்போதைய பூத்துறை கிராம நிர்வாக அலுவலராக இருந்த விஜயகுமாரன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களில் நான் எப்போது கையெழுத்திட்டேன் என்பதே எனக்கு தெரியவில்லை என விஜயகுமாரன் பிறழ்சாட்சியம் அளித்தார். பின்னர் அவரிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். அவரை தொடர்ந்து எதிர்தரப்பு வக்கீல் வித்யாசங்கர் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

ஏற்கனவே இவ்வழக்கில் அரசு தரப்பின் முதல் சாட்சியான ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்திருந்த நிலையில் மற்றொருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.