டெல்லி: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன.

ஆகையால் மாணவர்களும் எப்போது தேர்வு நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்று யூஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூலை 1 முதல் 31ம் தேதி வரையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 6 நாட்கள் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கையை வரும் ஆக.1 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்தலாம். மே 15ம் தேதி முதல் ஆன்லைனில் பிராஜக்ட்  உள்ளிட்ட நடைமுறைகளை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே மாணவர்கள் குழப்பமடையாமல் தேர்வுக்கு தயாராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டெர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.