சென்னை,

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம்  தமிழர் கட்சி போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது,

நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடந்து வந்தது. பொதுமக்கள், மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருதி தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும்,  சேலம் உருக்காலை பிரச்சினை, ஜல்லிக்கட்டு, தாமிரபரணி, அத்திக்கடவு-அவினாசி, மீனவர்கள் பிரச்சினை என தமழகத்தில் போராட்டமே வாழ்கையாக உள்ளது என்று கூறினார்.

சுட்டக்கொல்லப்பட்ட தமிழக மீனவரை, இலங்கை கடற்படை நாங்கள் சுடவில்லை என மறுக்கிறது. அப்படியென்றால் பிரிட்ஜோவை சுட்டது இந்திய கடற்படையா? அல்லது சீன கடற்படை நமது மீனவரை சுட்டு இருந்தால், அது இந்தியாவுக்கும் பேராபத்தாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்திய பெருங்கடலையும், இந்தியாவை காக்கும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. உலக அளவில் மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்க சென்றால் சுடப்படுவது இல்லை. ஆனால், இந்தியாவுக்கு நட்பு நாடு என்று சொல்லிக் கொள்ளும் இலங்கை அரசு மீனவர்களை சுடுகிறது.

நமது மீனவர்களின்  படகுகளை அவர்கள் திரும்ப தர மறுத்து வருகிறார்கள். படகுகளை மீட்க முடியவில்லை. ஆனால் போர்க்கப்பல்களை மட்டும் இந்திய அரசு, இலங்கைக்கு விற்கிறது என்றார்.

மேலும், எதிர்க்கட்சியாக இருந்தபோது தற்போதைய தமிழகத்த சேர்ந்த  மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கச்சத்தீவு மீட்போம் என்று கூறினார். அதற்காக கடற்தாமரை என்ற போராட்டமும் நடத்தினார்.

ஆனால்,  இதுவரை 843 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு உள்ளார்கள். இதில் பலர் இறந்துள்ளனர். அவர்கள் நீதி கிடைக்கவில்லை என்றார்.

மேலும், கேரள மீனவர்களை இத்தாலி கடற்படை சுட்டுக் கொன்ற போது ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக மீனவருக்கு நிதி வழங்கவில்லை.எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் மீனவர் பிரச்சினைக்கு உடனடின  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,  தூய அரசியலை நடத்தும் நோக்கில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ந்தேதி நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் அதிமுக சசி அணி  சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்றும்,ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார் என்றும், தீபா பேரவை சார்பில் தீபா களமிறங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், திமுக சார்பில் சோழா.முத்துச்செல்விக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. தற்போது சீமானும் களத்தில் குதித்து உள்ளார். மக்கள் நலக்கூட்டணியினரும் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இந்த இடைத்தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி வருகிறது..