டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  டெல்லியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் 76-வது குடியரசு தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், பிரதமர் மோடி,   டெல்லியில் உள்ள செங்கோட்டையில்  தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.  இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு,   துணை இராணுவப் படையின் தீவிரக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், டெல்லி காவல்படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த துணை இராணுவப் படையின் முக்கிய அதிகாரிகள், கடந்த 27 மற்றும் 29 ம் தேதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குறைபாடுகளைச் சரி செய்து தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பும்படி டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகக் கூறப்பட்ட இடங்களில், ஆய்வு நடத்திய டெல்லி காவல் ஆணையர் சஞ்சய், குளறுபடிகளைச் சரிசெய்தார். மேலும், மகாத்மா காந்தி சமாதி அமைந்திருக்கும் ராஜ்காட், பிரதமர் தேசிய கொடியேற்ற உள்ள செங்கோட்டை உட்பட முக்கிய பகுதிகளில் 144 தடை விதித்தார். இப்பகுதிகளில் எவ்வித கூட்டம் நடத்தவும், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.