திருவள்ளூர்: குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி அமித்ஷாவிடம் விஞ்ஞான வளர்ச்சி சிக்கி விட்டது என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பியும், மாநில செயல்தலைவருமான ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் திமுகவினருக்கு 7 சீட்டுகளை கொடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்தநாளை திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னிட்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும்,  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் ஏ.ஜி சிதம்பரம் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்,  புதிதாக கட்சி பொறுப்பேற்ற நபர்களுக்கு சபன்றிதழ்களை வழங்கிபேசிய காங்கிரஸ் எம்.பி.ஜெயக்குமார், ராஜீவ்காந்திக்கு புகழாரம்சூட்டியதுடன், இந்தியாவில்,  விஞ்ஞான ரீதியான வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் ராஜீவ்காந்தி என்று கூறினார். தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் குறித்தும் மத்தியஅரசை கடுமையாக சாடினார். தற்போதைய திமுக அரசின் நடவடிக்கைகளை பாராட்டியவர், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலை இணைந்து வெற்றி பெற அனைத்து விதத்திலும் கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10 இருக்கைகள் வழங்கப்படுகிறது. இதில் 7 இடங்களை திமுகவினருக்குத்தான் வழங்கி இருக்கிறேன். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன், பால்வளத் துறை அமைச்சர் நாசர், முன்னாள் மாவட்டச்செயலாளர் வேணு உள்பட 7 பேர் தன்னிடம் இருந்து 7 இடங்களை பெற்றுள்ளனர்.  கூட்டணி கட்சியினருக்கும் மதிப்பு வழங்க வேண்டும் எனறே, அவர்களுக்கு அவர்களுக்கு உதவியாக கூறினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் எம்.பி., நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இந்த வளர்ச்சி இன்று குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிக்கி சீரழிந்து வருகிறது, இதன்மூலம் அவர்கள் இன்று, எங்களின் தலைவர் ராகுல் காந்தி, நீதிபதிகள், ராணுவ தளபதிகள், பத்திரிகையாளர்கள், வங்கி தலைவர்கள் ஏராளமானோரின் டெலிபோன்களை ஒட்டுக்கேட்டு வருகின்றனர, பெகாஸஸ் ஆப் மூலம் ஒட்டு கேட்டு உளவு பார்க்கப்படுவது கீழ்த்தரமான செயல் என்றும் கடுமையாக சாடினார்.