டெல்லி: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள், அதாவது 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் வரும் 21ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வரலாம், பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்கலாம் என மத்தியஅரசு புதிய  வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக  கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங் கள் மூடப்பட்டன. தற்போது, பொதுமுடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  வரும் 21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.  பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன, எதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் போன்ற உத்தரவுகளையும் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் டிவிட்டரில் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

மாநில அரசுகள்,  தன்னார்வ அடிப்படையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை வரும் 21-ம் தேதி முதல் திறக்க வேண்டும்.

 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்கு வர 21-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்படுகிறது.

இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம்.

ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, எச்சில் துப்பாமல் இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி முறையை தொடர்ந்து அனுமதித்து, மாணவர்களை ஊக்கப்படுத்துவதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுமதி கிடையாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளிகள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பு வளாகம் முழுவதும் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக தனிமை மையங்களாகப் பயன்படுத்தபட்ட பள்ளிகள் முறையாக சுத்தப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர், மாணவர் உரையாடலை திறந்தவெளியில் நடத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.