சென்னை: பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பத்தினர் பல்வேறு ஊர்களுக்கு வாழ்வாதாரம் தேடி சென்றதால், அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. அதுபோன்ற பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து  மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தீவிரப்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி,  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்தறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,  அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தை திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

5, 8, 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும் .

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

EMIS இணையதளம் அல்லது செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் உத்தரவிட்டுள்ளது.