பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை..

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பாலியல் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி தர்பார் மகிளா சாமான்ய கமிட்டி என்ற தன்னார்வு அமைப்பு, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனுத்  தாக்கல் செய்திருந்தது.

’’நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள், கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.அவர்களும் மனித ஜென்மங்கள் தான். கவுரமாக வாழ அவர்களுக்கு உரிமை உள்ளது.எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்’’ என அந்த மனுவில்  தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரரராவ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த்’’ ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய  மாநிலங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது., அவர்களில் 96 சதவீதம் பேர் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ளனர்’’ என்று  குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு,’’கொரோனாவால் வேலை இழந்துள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு, அடையாள சான்று ஏதும் கேட்காமல் மாதம் தோறும் ரேஷன் மற்றும் பண உதவி வழங்க வேண்டும்’’ என மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது..

-பா.பாரதி.