டில்லி

ச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ  பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3 ஆம் நீதிபதி கார்த்திகேயன் தமது விசாரணைக்குப் பின்பு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் வழக்கின் விசாரணையை வரும் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது.  இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.