டெல்லி

நீதிமன்றங்கள் வெறும் டேப் ரிகார்டர்களாக செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

கடந்த 1995 ஆம் ஆண்டு டெல்லியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.  கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் தீர்ப்பை எதிர்த்து கணவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.

வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள்,

”ஒரு நீதிபதி நீதிக்கு உதவியாக விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். சில வழிகளில் வழக்கறிஞர் மந்தமாக இருந்தாலும், நீதிமன்றம் நடைமுறைகளை திறம்பட கட்டுப்படுத்த வேண்டும். இதனால் உண்மை வெளிப்படும்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் சேவை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான உறவுகள்தான், குற்றவியல் நீதி அமைப்பின் மூலக்கல் ஆகும். அதனால்தான், அரசு வழக்கறிஞர் பதவி நியமனம் போன்ற விஷயங்களில் அரசியல் ரீதியாக எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது.

வழக்கின் உண்மை நிலவரங்களை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றத்தின் கடமை ஆகும். நீதிமன்றங்கள் விசாரணையில் பங்கு வகிக்க வேண்டும். சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக செயல்படக்கூடாது. வழக்குத் தொடரும் அமைப்பின் தரப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் கடமை தவறுதலை நீதிமன்றம் கவனிக்கவேண்டும்.”

என்று தெரிவித்துள்ளனர்