சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர்மீதான தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக காவல்துறை, மேலும் 4 வழக்குகளில் அவரை கைது செய்து சிறையிலேயே அடைத்து வைத்தது. இந்த வழக்குகளில் ஜாமின் கோரி  சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்  4 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு தமிழக நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம், அவர்மீதான சிறை தண்டனைக்கு தடை விதித்தது. மேலும், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கடலூர் மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மேலும், 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளுக்கும் ஜாமின் கோரி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சவுக்கு சங்கருக்கு 4 வழக்குகளிலும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்