சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நிகழ்வதையொட்டி, தெற்கு ரயில் நாளை, நாளை மறுதினம் (மார்ச் 6 மற்றும் 7ந்தேதி) சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்ட அறிக்கையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6இல் (நாளை) நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.
விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6, 7) காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – நாகப்பட்டினம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6, 7) பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06134), மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகச் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]