சென்னை:
காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்பதாக உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்  ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த  தந்தை, மகன்  ஆகியோரை காவல்நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், அங்கு வைத்து சரமாரி யாக தாக்கியதால், அவர்கள் மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதன் மூலம் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, இது தொடர்பான  வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், இதற்கான அனுமதியையும் நீதிமன்றத்தில் கேட்டது. அதையடுத்து,  சி.பி.ஐ வழக்கை ஏற்று விசாரணையைத் தொடங்கும் வரை இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் என்று நீதிமன்றம் அறிவித்து விசாரணையை முடுக்கி விட்டது.
இதைத்தொடர்ந்து, இருவர் இறப்புக்கும் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யர்பபட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை  சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இனி ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.