பெங்களூரு:

நடராஜனை பார்க்க பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோல் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

சசிகலா கணவர் நடராஜன் (வயது 74), சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்து, கவலைக்கிடமான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இருமுறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து 234 நாட்கள் சிறைவாசத்தை முடித்துள்ள சசிகலா கணவரை பார்க்க, 15 நாட்கள் பரோல் கோரி பெங்களூரு மத்திய சிறையில் விண்ணப்பித்தார்.

இதனை ஆய்வு செய்த சிறை நிர்வாகம் நடராஜன் உடல்நிலை சரியில்லை என்பதற்கு தகுந்த ஆதாரமில்லை என கூறி பரோல் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து 15 நாள் பரோல் கேட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் மனு மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.

அதனுடன், நடராஜன் உடல்நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கை இணைத்துள்ள அவர், பரோலில் செல்லும் இடத்திலுள்ள முக்கிய பிரதிநிதியிடமிருந்து விளக்க கடிதம், நடராஜன் உடல்நிலை பாதிப்பு உண்மைதான் என்ற முக்கிய பிரமுகரின் கடிதத்தையும் அளித்துள்ளார்.