பாலிவுட்டில் பழம்பெரும் நடன இயக்குநராக வலம் வந்த சரோஜ் கான் கடந்த ஆண்டு ஜூன் 3 அன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

நேற்று சரோஜ் கானின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக அவரது மகள் சுகைனா கான் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘ஒட்டுமொத்த திரைத்துறையும் எனது தாய் நேசித்தது. ஆனால் நாங்கள் அவரது வாழ்க்கை போராட்டத்தை அருகில் இருந்து பார்த்துள்ளோம். அவரது கதையையும், நாங்கள் அவர் வைத்திருக்கும் அன்பையும், நடனம் மீதான் அவரது காதலையும், சக கலைஞர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பையும், இந்த பயோபிக் படத்தின் மூலம் சொல்ல முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இப்படத்துக்கான உரிமையை டி-சிரீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.