மும்பை: தற்போதைய நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு கவனமும் ஐபிஎல் தொடர்பாகவே இருக்கும் நிலையில், தான் கமெண்டரி பேனலில் மீண்டும் சேர்க்கப்படுவேனா? என்பது குறித்து பிசிசிஐ அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

இவர், இந்தியாவின் புகழ்பெற்ற வர்ணனையாளர்களில் ஒருவர்.

பிசிசிஐ வகுத்த விதிகளுக்கு மாறாக, தான் ஏதேனும் தெரியாமல் தவறு செய்திருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் அவர் அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். பிசிசிஐ அமைப்பின் கமெண்டரி குழுவிலிருந்து தான் நீக்கப்பட்டதை, ஒரு தொழில்முறை முடிவு என்ற வகையில் தான் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

அதேசமயம், அந்த முடிவு தன்னை மிகவும் காயப்படுத்தி அதிர்ச்சியடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிசிசிஐ எனக்கான பணி வழங்குநர் அமைப்பாகும். எனவே, எனக்கான வாய்ப்புகள் தொடர்பான முடிவை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அந்த வாய்ப்பை, எனக்கான நிரந்தர உரிமையாக நான் கருதவில்லை என்று மேலும் கூறியுள்ளார் மஞ்சரேக்கர்.