பாலக்காடு :

சேலத்தில் இருந்து தக்காளி பெட்டிகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று நேற்று கேரள மாநிலம் அங்கமாலிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால், மாநில எல்லையில் போலீசார் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் லாரி பாலக்காடு அருகே வாளையார் பகுதியில் சென்றபோது, போலீசார் அதனை வழி மறித்து சோதனையிட்டனர்.

தக்காளி பெட்டிகளுக்கு இடையே 25 பெட்டிகளில் பயங்கர வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெட்டிகளில் இருந்த 7 ஆயிரம் ஜெல்லட்டின் குச்சிகளும், 7 ஆயிரத்து 500 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக லாரி உரிமையாளர் பிரபுவும், உடன் சென்ற ரவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வெடிபொருட்களை யாருக்கு கொடுக்க எடுத்து சென்றார்கள் என கைதான இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

– பா. பாரதி