சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த 2 வாரங்களாக  அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு, நியாய விலை கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்து உள்ளது.  அதன்படி,  பண்ணை பசுமை காய்கறி கடைகளில் இனி கிலோ வெங்காயம் ரூ.30க்கு ஒரு  வாங்கலாம் என  அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை, மற்றும் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், காய்கறிகள் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது.  வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம், தக்காளி ஆகிய அத்தியாவசிய காய்கறிகளின் வரத்து குறைந்து விலையானது  உயரத்தொடங்கி உள்ளது. பண்டிகை காலம் என்பதால், இநத் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவதால், இதை தடுக்க மாநில அரசுகளே காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெங்காய உற்பத்தியை பொறுத்தவரை மகாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ராவில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் வரத்து இருந்தால் விலையுயர்வு சீராக இருக்கும். வரத்து குறைய தொடங்கினால் அவ்வளவு தான் வெங்காயம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி விடும். கடந்த 10 நாட்களா சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உள்பட சில காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியாகியுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தினை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க எளிய கூட்டுறவுத்துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் இன்று முதல் (05.11.2023)வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30/- வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது” என கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.