சென்னை: அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த ஓவியம், இசை, உடற்கல்வி போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது.

தங்களது பணியை நிரந்தரமாக்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசை கேட்டு வந்தனர். இந் நிலையில், 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,483 உடற்கல்வி, ஓவியம், இசை போன்றவற்றை பயிற்றுவிக்கும் சிறப்பாசிரியர்களின் ஊதியம் ரூ.7,700-ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.அதாவது மாதந்தோறும் ரூ.7,700 ஆக இருந்த ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் எடுத்தால் மட்டுமே ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.