பம்பா:
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 14ந்தேதி மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. இந்தமுறை பக்தர்கள் ஆன்லைன் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் அய்யப்பன் கோவில், கொரோனா அச்சுறுத்தல் காரணாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வழக்கமான நடைமுறைகள் படி, குறைந்த அளவிலான ஊழிகள் மற்றும் தந்திரிகளைக் கொண்டு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி,  வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி கோவில்  திறக்கப்படுகிறது.  அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10 மணிக்கு அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் சிறப்பு பூஜைகளான உதயஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால்,    ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது