பம்பா: ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் தமிழ்மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம் தோறும் திறக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ் மாத பிறப்பை ஒட்டி முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதுபோல, ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளின்போது தொடர்ந்த நடை திறந்திருக்கும்.

இந்த நிலையில், நாளை ஆடி மாதம் பிறப்பையொட்டி,  இன்று மாலை 5 மணிக்கு  கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில்  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.  இன்று  கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறாது, வழக்கமான பூஜைகளுடன்  இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பின்னர்,  நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் , வழிபாடுகளுக்கு பின் இரவு 10மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.