1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என கடந்த 8ம் தேதி  திடீரென அறிவித்த பிரதமர் மோடி,  பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தார்.
கையிலிருக்கும் பழைய நோட்டுகளை தினம் 4000 ரூபாய் அளவுக்கு வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்தத் தொகையை 4500 ரூபாயாக அறிவித்தார்கள்.
download
ஆனால் இவை எல்லாம் அறிவிப்பாகவே இருந்தது. நடைமுறையில் பெரும்பாலான வங்கிகளில் 2000 அல்லது 2500 ரூபாய்தான் மாற்றிக் கொடுத்தார்கள். காரணம், பணத்தட்டுப்பாடு.
இந்த நிலையில், 4500 ரூபாய் என்பதை 2000 ரூபாயாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே ஒருவர் ஒரு முறைதான் இப்படி பணத்தை மாற்றலாம் என்று அறிவித்தது. மாற்றுபவர்களை அடையாளம் காட்டுவதற்காக விரலில் மை வைக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் வங்கிகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து நோட்டுக்களை மாற்றுகிறார்கள். ஆனால் வங்கியில் போதிய பணமின்மை, பெருகி வரும் கூட்டம் ஆகியவை காரணமாக பல இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. வங்கிப்பணியாளர்களுடன் மக்கள் மோதும் சூழலும் ஏற்படுகிறது.  இதனால் கலவரச் சூழல் ஏற்படுவதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து இனி 2000 ரூபாயையும் வங்கியில் மாற்ற முடியாது என அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இனி அனைவருமே தங்களுக்கான வங்கிக் கணக்கை ஆரம்பித்து அதில் பணத்தை செலுத்தி, ஏ.டி.எம். மூலம் எடுத்துக்கொள்ளும்படி செய்யலாம் என மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.