பெங்களூர்,
பாரதியஜனதா கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான ரூ.40 கோடி ஊழல் வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில்  இருந்து எடியூரப்பா தப்புவாரா என அவரது ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, அவரது அரசியல் மற்றும் பதவியை பயன்படுத்தி அவரது மகன்கள், மருமகன் உள்பட பலர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக ஊழல் புரிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
2006ஆம் ஆண்டு குமாரசாமி முதல்வராக இருந்தபோது இந்த எடியூரப்பா துணை முதல்வராக இருந்தார். அப்போது  எடியூரப்பாவின் மகன், மருகமகன்  இருவருக்கும் ஆளுக்கொரு பிளாட் கிடைத்தது. பெங்களூர் வளர்ச்சி நிறுவனம் எனும் அரசு நிறுவனத்துக்குரிய அந்த நிலங்களை தலா இருபது இலட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள். பின்னர் 2008ல் எடியூரப்பாக முதல்வராக வந்த போது அந்த பிளாட்டுக்கு பட்டா வாங்கி அதிக விலைக்கு விற்றார்கள்.
இந்த பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து சிபிஐ போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட எடியூரப்பா, அவரது 2 மகன்கள், மருமகன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், பெல்லாரியைச் சேர்ந்த அதன் நான்கு துணை நிறுவனங்கள் மீது கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 16ந் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், எடியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோரின் வங்கி கணக்குகளில் ரூ.20 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

இதுபோக எடியூரப்பாவின் மகன்கள் நடத்தி வரும் பிரேர்னா கல்வி அறக்கட்டளைக்கும் ரூ.20 கோடி நன்கொடை யாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.40 கோடியும், சுரங்க ஒப்பந்த அனுமதி தருவதற்காக எதியூரப்பாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த லஞ்சம். இந்தப் பணத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் வழங்கியுள்ளது.
மேலும், பெங்களூரு அருகே உள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கும், அவர்களது துணை நிறுவனங்களுக்கும் ரூ.20 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டியுள்ளனர்.
இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எடியூரப்பா குடும்பத்துக்கு கொடுத்த லஞ்சத்தை மூடி மறைக்க நடந்ததாகும்.  உண்மையில் இந்த நிலப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது. எடியூரப்பா தனது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என குறிப்பிட்டு இருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
இதில் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரது அரசியல் எதிர்காலத்தின் நிலை என்னவென்று அவரது ஆதரவாளர்கள் திகைத்துள்ளனர்.
ஏற்கனவே ஊழல் வழக்கில் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற எடியூரப்பாவுக்கு மீண்டும் சிறைவாசம் கிடைக்குமா அல்லது தப்புவாரா என்பது திக்… திக்… இன்றைய தீர்ப்பில் தெரியவரும்..?